தூத்துக்குடி: அமைச்சர் ஸ்ரீநாத்தின் பாதுகாப்புப் பணிக்குச் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை நிலைக் காவலர், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி 3-ஆவது மைல் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த வீரபுத்திரன் மகன் மயிலேறி (45). 2017-ஆம் ஆண்டு காவலர் பேட்சைச் சேர்ந்த இவர், தூத்துக்குடி ஆயுதப்படையில் 3-ஆவது பிளட்டூனில் நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று தனது குடியிருப்பில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வீட்டின் பாதுகாப்புப் பணிக்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
பாளையங்கோட்டை பிரதான சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மயிலேறியின் வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மயிலேறியை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு இருசக்கர வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மயிலேறி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பி.என்.டி. காலனி 12-ஆவது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகநாதன் (24) என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.