தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேற்று (01.07.2026) திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு வரவழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தந்த அப்போதைய விசாரணை அதிகாரியும், தற்போது அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளருமான வனிதா மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சமுத்திரகனி ஆகியோர் பாராட்டுப் பெற்றனர்.
மேலும், சிப்காட் காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தந்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர்கள் சிவனேசமாணிக்கம், இளையராஜா ஆகியோருக்கும் நற்சான்றிதழ் வழங்கி காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
குற்ற வழக்குகளில் திறம்பட விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் இந்த பாராட்டு வழங்கப்பட்டது.