வாகன உரிமையாளர்கள் தங்களது காப்பீட்டு பாலிசிகளின் உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் கட்டாயம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் லாரிகளுக்கான போலி காப்பீட்டு (இன்சூரன்ஸ்) பாலிசிகளை தயாரித்து பல ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டதாக, லாரி அதிபர்கள், ஆர்.டி.ஓ. புரோக்கர் மற்றும் இன்சூரன்ஸ் புரோக்கர் உள்ளிட்ட 4 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.
ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ஒருவர் விபத்து இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் பாலிசி போலியானது என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
விசாரணையில், 2020 முதல் லாரிகளின் பதிவு எண்களை இருசக்கர வாகனங்களாக இணையதளத்தில் பதிவு செய்து குறைந்த கட்டணத்தில் உண்மையான பாலிசி பெற்று, பின்னர் கணினி மூலம் அதன் விவரங்களை மாற்றி 1,000-க்கும் மேற்பட்ட போலி காப்பீட்டு பாலிசிகளை தயாரித்து விநியோகித்தது கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி அதிபர்கள் செந்தில்குமார், மாரிமுத்து, ஆர்.டி.ஓ. புரோக்கர் உதயகுமார் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த இன்சூரன்ஸ் புரோக்கர் ராமகிருஷ்ணன் (ரமேஷ்) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வாகன உரிமையாளர்கள் தங்களது காப்பீட்டு பாலிசிகளின் உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் கட்டாயம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.